For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை இரட்டை குண்டுவெடிப்பு-3 பேருக்கு தூக்குத் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு மும்பை சிறப்பு பொடா கோர்ட் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

2003ம் ஆண்டு மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை மும்பை சிறப்பு பொடா நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இன்று இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபியுக் அன்சாரி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு இது மரண அடியாகும் என்றார்.

முன்னதாக இந்த வழக்கில் ஆஜராகி உஜ்வால் நிகாம் வாதிடுகையில், துபாயில் இதற்கான சதித் திட்டத்தை லஷ்கர் இ தொய்பாவினர் தீட்டினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து இந்த சதித் திட்டத்தில் பங்கேற்றனர்.

இவர்கள் 2002ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மும்பை அரசு பஸ்ஸில் குண்டு வைக்க திட்டமிட்டனர். ஆனால் அது கை கூடவில்லை. இதையடுத்து 2003ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பஸ்சில் குண்டு வைத்தனர். அதில், 2 பேர் உயிரிழந்தனர்.

ஆனால் இதை விட பெரிய அளவில் பாதிப்பு வரும்படியாக குண்டுவெடிப்பை நடத்த இவர்களுக்கு மேலிருந்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் குண்டுவெடிப்புகளை இவர்கள் நிகழ்த்தினர்.

ஒரு தீவிரவாத செயலில் கணவர், மனைவி, மகள் என ஒரு குடும்பமே ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.

இவர்களின் திட்டப்படி 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜாவேரி பஜார் மற்றும் கேட்வே ஆப் இந்தியாவில் குண்டுகள் வைக்கப்பட்டன என்றார்.

மும்பை இரட்டைக் குண்டுவெடிப்பு தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபியுக் அன்சாரி, ஜாகித் யூசுப் பட்னி, ரிஸ்வான் லட்டூவாலா, ஷேக் பேட்டரிவாலா ஆவர்.

சயீத்தின் மகள் பர்ஹீன் என்பவரும் பின்னர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில், 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 2002ம் ஆண்டு குஜராத் கலவரங்களுக்குப் பழி தீர்க்க இந்த வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் ஜாகித் யூசுப் பட்னி, அப்ரூவராக மாறினார். தனது பங்கை அவர் ஒத்துக் கொண்டார். மேலும், தான் துபாயில் வாழ்ந்தபோது எப்படி ஹனீப்பை சந்தித்தேன் என்பது குறித்தும், குண்டுவெடிப்புச் சதித் திட்டத்தையும் விவரித்து ஒத்துக் கொண்டார்.

இந்த வழக்கில் புதிய திருப்பமாக 2008ம் ஆண்டு லட்டூவாலா மற்றும் பேட்டரிவாலா ஆகியோர் ஆதாரம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி விடுவிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்களது விடுதலையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் மொத்தம் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. அவர்களில் முக்கியமானவர் குண்டு வைக்கப்பட்டிருந்த டாக்சியின் டிரைவர் ஆவார்.

இந்த வழக்கை மொத்தம் பங்களே, எஸ்.எஸ்.ஜோஷி என முன்பு இரு நீதிபதிகள் விசாரித்தனர். கடைசியாக நீதிபதி புரானிக் விசாரித்து தற்போது தீர்ப்பளித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X