சர்வக்னர் சிலை திறப்பு-தயாராகும் சென்னை பூங்கா

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வருகிற 9ம் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. கர்நாடகத் தமிழர்கள் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். முதல்வர் கருணாநிதி முன் கூட்டியே பெங்களூர் போய் விட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 13ம் தேதி சர்வக்னரின் சிலை சென்னையில் திறக்கப்படவுள்ளது. இதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா கலந்து கொள்கிறார்.
அயனாவரத்தில் உள்ள யுனைட்டெட் இந்தியா காலனியில் உள்ள பூங்காவில்தான் சர்வக்னரின் சிலை நிறுவப்படவுள்ளது. இந்த பூங்கா தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளது.
இந்த சிலையை கன்னட சங்கம் நிறுவுகிறது. இப்பகுதியில் ஏராளமான கன்னடர்கள் வசிக்கிறார்கள்.
முன்னதாக இங்கு நிறுவப்படவுள்ள சர்வக்னர் சிலை, பெங்களூரில் உள்ள கன்னட பவன் அலுவலக பார்க்கிங் பகுதியில் தரையில் கிடத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கர்நாடக மாநில கன்னட மற்றும் கலாச்சார வளர்ச்சித்துறை இணை இயக்குநர் சிக்கண்ணா கூறுகையில், இந்த சிலைதான் சென்னையில் நிறுவப்படவுள்ளது என்று உறுதிப்படுத்தினார்.
கார் பார்க்கிங் பகுதியில் சிலை ஏன் கிடக்கிறது என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், வெற்று உடலுடன் அரை நிர்வாண கோலத்தில்தான் சர்வக்னர் இருப்பார். அதேபோன்ற கோலத்தில்தான் இந்த சிலை வடிக்கப்பட்டது.
இந்த சிலை முன்பு கன்னட பவன் முன்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது கார் பார்க்கிங் பகுதியில் கொண்டு வந்து வைக்கப்பட்டதாக சில்பகலா அகாடமியைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியர் தெரிவித்தார்.
தற்போது சிலை திறக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து அது சுத்தம் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சர்வக்னர் யார்..?:
16வது நூற்றாண்டைச் சேர்ந்தவர் சர்வக்னர். கர்நாடகத்தின் ஹவேரி மாவட்டம், ஹிரேகெரூர் தாலுகாவைச் சேர்ந்த அபலூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
கவிஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தத்துவவாதி, புரட்சிகர சிந்தனை உடையவர் என்று பன்முகம் கொண்டவர்.
இவரது கவிதைகள் எல்லாம் தத்துவ சிந்தனைகளின் விளைவாக பிறந்தவை. மூன்று வரிக் கவிதைகளையே இவர் எழுதியுள்ளார்.
16ம் நூற்றாண்டில் கன்னட இலக்கியம் பொலிவு பெற இவரது கவிதைகள் முக்கிய பங்கு வகித்தன.
இவரது பிறப்பு, இறப்பு குறித்த சரியான விவரங்கள் கன்னட வரலாற்றியலாளர்களிடம் இல்லை. இருப்பினும் 16வது நூற்றாண்டின் முதல் பாதியில் இவர் வாழ்ந்து மறைந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சமூக, மதம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து 2000 மூன்று வரிக் கவிதைகளை இவர் இயற்றியுள்ளார். இவை தவிர ஏராளமான புதிர்க் கவிதைகளையும் இவர் படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications