தமிழகம்: இளைஞர் காங்.கை பலப்படுத்த ராகுல் திட்டம்
சென்னை: தமிழகத்தில் இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் தீவிரமான முயற்சிகளில் அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பலப்படுத்தி வரும் ராகுல்காந்தி அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.
18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ராகுல் வயது சான்றிதழுடன் தான் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
35 வயதை தாண்டியவர்கள் இளைஞர் காங்கிரசில் இருக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ள ராகுல் அவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பஞ்சாப், குஜராத், புதுச்சேரி மாநிலங்களில் இளைஞர் காங்கிரசுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அந்த அமைபுக்கு தேர்தலும் நடத்தப்பட்டது.
அதே போல தமிழ்நாட்டிலும் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர் சேர்ப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை மேற்பார்வையிடவும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தலை நடத்தவும் ஆந்திராவை சேர்ந்த உஷா நாயுடு, கர்நாடகத்தைச் சேர்ந்த சூரஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள ராகுல் சமீபத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வரை வரும் 11ம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் ராகுல்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியே அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications