போலீஸ் முகாம்களிலும் 'கான்டம் மெஷின்'!
சென்னை: போலீஸாருககான முகாம்களிலும் தானியங்கி ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவ தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் (டான்சாக்ஸ்) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுமதி கோரி கடிதம் எழுதவுள்ளது டான்சாக்ஸ்.
கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 107 போலீஸாருக்கு எச்ஐவி வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளதா, இல்லையா என்பது குறித்த புள்ளி விவரம் டான்சாக்ஸிடம் இல்லை.
இருப்பினும், எய்ட்ஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் காவல்துறை முகாம்களிலும் தானியங்கி ஆணுறை விற்பனை மெஷின்களை நிறுவ டான்சாக்ஸ் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து டான்சாக்ஸ் ஆலோசகரும், முன்னாள் எஸ்.பியுமான சத்யநாராயணன் கூறுகையில், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஆலோசனை முகாம்கள் மற்றும் சோதனை முகாம்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 107 போலீஸாருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. தற்போதைய நிலவரம் குறித்து எங்களிடம் புள்ளிவிவரம் இல்லை.
இருப்பினும் போலீஸார் மத்தியில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்து தொடர்ந்து போதித்து வருகிறோம். தற்போது போலீஸ் முகாம்களில் தானியங்கி ஆணுறை விற்பனை மெஷின்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான செக்ஸ் மிகவும் அவசியம் என்பதை தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். குறிப்பாக லாரி டிரைவர்கள், காவல்துறையினர் மத்தியில் இதை கூடுதலாகவே பிரசாரம் செய்து வருகிறோம்.
திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவுகளைத் தவிர்க்க வேண்டும், பல பெண் உறவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கோரி வருகிறோம். இருப்பினும் இந்த பிரசாரத்தை அவர்கள் மதிப்பதாக தெரியவில்லை. எனவேதான் இப்போது செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தடுக்கவில்லை. ஆனால் பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூற ஆரம்பித்துள்ளோம் என்றார்.
பணிச்சுமை, கண்ட நேரங்களில் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளிட்டவை காரணமாக குடும்பத்தினரை விட்டு அதிக நேரம் பிரியும் நிலையில் போலீஸார் உள்ளனர். இதுவே அவர்கள் தவறான உறவுகளை நோக்கி போக முக்கிய காரணம் என டான்சாக்ஸ் கூறுகிறது.
இதுகுறித்து சத்யநாராயணன் கூறுகையில், சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 22 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களது முகாம்களில் ஏற்கனவே தானியங்கி ஆணுறை மெஷின்களை நிறுவியுள்ளோம். அதே அடிப்படையில் போலீஸ் முகாம்களிலும் நிறுவ தீர்மானித்துள்ளோம்.
போலீஸாருக்கு மட்டுமல்லாமல் ராணுவத்தினரிடமும் எச்ஐவி பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரியதாகும்.
குறைந்த அளவிலான போலீஸாருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இதுகுறித்த விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தி, பாதுகாப்பான செக்ஸைக் கடைப்பிடிக்குமாறு அவர்களை உஷார்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.