மேலும் 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் - புனேவில் 2 பேர் கவலைக்கிடம்

இந்தியாவிலேயே பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகராக புனே மாறியுள்ளது. அங்கு ரீடா ஷேக் என்ற பள்ளிச் சிறுமி பன்றிக் காய்ச்சலுக்கு இறந்த நிலையில் மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் இருவரும் ஆண்கள். இருவரும் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தனியார் டாக்டர் ஆவார். அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செயற்கை சுவாசம் தரப்பட்டு வருகிறது.
35 வயதான இன்னொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் செயற்கை சுவாசம் தரப்பட்டு வருகிறது. இவர் ஒரு பார்மசிஸ்ட் ஆவார். இவருக்கு ஏற்கனவே இதய நோயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரது நிலையும் பயப்படும் படி இல்லை என்றாலும் கூட கவலைக்கிடமான நிலையிலிருந்து இருவரும் இன்னும் மீளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சஸ்ஸூன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 23 பேருக்கு பாதிப்பு...
இதற்கிடையே நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதிதாக 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
இவர்களில் 11 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். எட்டு பேர் புனே மற்றும் நான்கு பேர் மங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுவரை இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதக்கப்பட்டோரின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications