மட்டன் பிரியாணி கேட்டு சாப்பாட்டை எறிந்த கசாப்!
இதுகுறித்து ஆர்தர் சாலை சிறை நிர்வாகிகள், தனி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து கசாப்பை கடுமையாக கண்டித்த நீதிபதி தஹிளியானி, இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், கசாப் இப்படி தட்டை தூக்கி எறிவது முதல் முறையல்ல. முன்பும் கூட ஒருமுறை இப்படி சாப்பாட்டை தூக்கி எறிந்துள்ளான். புதன்கிழமையும் இதுபோல சாப்பாடு தரப்பட்டபோது அதை வேண்டாம் என்று கூறி தூக்கி எறிந்து விட்டான். மேலும் தட்டை எடுத்து தனது அறை சுவற்றில் வைத்து மோதி நசுக்கி விட்டான்.
மேலும், இனிமேல் சாப்பிடவும் மாட்டேன் என்று பிடிவாதமாக கூறினான். இதையடுத்தே நீதிமன்றத்தில் தெரிவிக்க நேரிட்டது என்றனர்.
பிற கைதிகளுக்கு என்ன சாப்பாடு தரப்படுகிறதோ அதையேதான் கசாப்புக்கும் தருகிறோம் என்றும் சிறை அதிகாரிகள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதி சிறை அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாயா என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று கூறினான் கசாப்.
அப்போது குறுக்கிட்ட அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், கசாப் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் நடந்து கொள்கிறான். ஒவ்வொரு தந்திரமாக செய்து வருகிறான்.
ரக்ஷா பந்தன் தினத்தன்று தனக்கு யாராவது ராக்கி கட்ட மாட்டார்களா என்று சிறைக் காவலர்களிடம் கேட்டுள்ளான். இந்த செய்தி மீடியாக்களி்ல் வந்துள்ளது. நாம் இப்படிக் கேட்டால் அது மீடியாக்களி்ல வரும் என்று தெரிந்தேதான் கசாப் இவ்வாறு கேட்டுள்ளான். இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபத்தை சந்திக்க அவன் முயலுகிறான் என்றார்.