சுதந்திர தினத்தன்று நாச வேலைக்கு சதி - டெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது
சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாச வேலையில் ஈடுபட இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
டெல்லியின் தார்யாகஞ்ச் பகுதியில், வெள்ளை நிற சான்ட்ரோ காரில் போய்க் கொண்டிருந்த ஜாவேத் அகமது, ஆஷிக் அலி ஆகிய அந்த இரு தீவிரவாதிகளையும் சிறப்புப் பிரிவு போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
மகாவீர் பார்க்கிங் பகுதியில் அவர்கள் இருவரும் பிடிபட்டதாக இணை ஆணையர் அகர்வால் தெரிவித்தார்.
அவர்களின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு முன்பே தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் பிடிக்க போலீஸார் வலை விரித்துக் காத்திருந்து பிடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதியன்று டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபட லஷ்கர் இ தொய்பா அமைப்பு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் டெல்லியில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
பிடிபட்ட இருவரிடமிருந்தும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் 2, 100 தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.