துவரம் பருப்பு விலை இன்னும் குறையவில்லை - சர்க்கரை விலை கடும் உயர்வு
சென்னை: துவரம் பருப்பு போதிய அளவுக்கு கிடைத்தாலும் கூட, விலை உயர்வாக இருப்பதால் தரம் குறைந்த துவரம் பருப்பை நோக்கி மக்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் அதற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், சர்க்கரை, வெல்லம் போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.
வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் ரேஷன் கடைகளுக்காக கொள்முதல் போன்ற காரணங்களால் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.98 வரை விற்பனை ஆனது. இந்த விலைஉயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஹோட்டல்களும் கூட பாதிக்ப்பட்டன.
இந்த நிலையில் பருப்பு மொத்த வியாபாரிகள் ஆஸ்திரேலியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் உற்பத்தியாகக் கூடிய துவரம் பருப்பை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறார்கள். இந்த வகையான பருப்பு டர்க்கி என்ற மஜீர் கோடா என்று அழைக்கப்படுகிறது.
இது பார்ப்பதற்கு இளம் மஞ்சள் நிறத்திலும், பருமன் இல்லாமல் தகடு மாதிரி இருக்கும். இவற்றில் சுவை குறைவாக இருக்கும். வட மாநில பருப்பு வகைகளுடன் ஒப்பிடும்போது இந்த வகையான துவரம் பருப்பு தரம் குறைந்ததாக கருதப்படுகிறது. தரம் குறைவாக இருப்பதால் விலையும் குறைவு.
முதல் ரக மஜீர் கோடா துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.65-க்கும், இரண்டாம் ரக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.55-க்கும் கிடைக்கிறது. விலை குறைவாக இருப்பதால் இந்த வகையான துவரம் பருப்புகளுக்கு சென்னையில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் இந்த பருப்பைத்தான் வாங்கி சாம்பார் வைக்கின்றனராம்.
வட மாநிலங்களில் இருந்து வரும் நல்ல தரமான துவரம் பருப்பு விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.87 வரை விற்பனை ஆகிறது. பர்மா துவரம் பருப்பு கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனையானது, தற்போது ரூ.68 ஆக குறைந்துள்ளது.
இந்தியா முழுவதும் வட மாநில துவரம் பருப்பு குறைந்த அளவே இருப்பு உள்ளதால் இதன் விலை மேலும் குறைய வாய்ப்பு இல்லை என்று வியாபாரிகள் கருதுகிறார்கள்.
மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து புது வரத்து உள்ளதால் இந்திய உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ.62 ஆகவும், பர்மா உளுத்தம்பருப்பு ஒரு கிலோ ரூ52 ஆகவும் விலை குறைந்துள்ளது.
ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து புது வரத்து உள்ளதால் ஒரு கிலோ ரூ.38-க்கு விற்பனை ஆன முதல் ரக கடலை பருப்பு ரூ.34 ஆகவும், சாதா ரகம் ஒரு கிலோ ரூ.34-க்கு விற்பனை ஆனது, ரூ.32 ஆகவும் குறைந்துள்ளது.
சர்க்கரை - வெல்லம் விலை உயர்வு..
துவரம் பருப்பு இப்படி மக்களை துவட்டி எடுத்து வரும் நிலையில் சத்தம் இல்லாமல் சர்க்கரையும், மண்டை வெல்லமும் விலை உயர்ந்து மக்கள் மண்டையை உடைக்க ஆரம்பித்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்குவதால் சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறதாம்.
கடந்த மாதம் 100 கிலோ சர்க்கரை மூட்டை ரூ.2,400-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.2,700 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.25-க்கு விற்பனை ஆனது, தற்போது ரூ.28 ஆக கூடியுள்ளது.
சேலம் வெல்லம் ஒரு கிலோ ரூ.28-க்கு விற்பனை ஆனது, ரூ.32 ஆகவும், வேலூர் வெல்லம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை ஆனது, ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி குறைவாலும், அமெரிக்க டாலர் விலை உயர்வாலும் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் ரூ.35-க்கு விற்பனை ஆனது, ரூ.39 ஆக அதிகரித்துள்ளது. மற்ற எண்ணை வகைகளின் விலையில் மாற்றம் இல்லை.
இதேபோல பூண்டு, மஞ்சள், புளி, தனியா போன்ற மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் கன்னத்தில் கை வைத்து கடவுளை வேண்டும் நிலை உருவாகியுள்ளது.