தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது - விஜயகாந்த்
ஸ்ரீவைகுண்டம் தேமுதிக வேட்பாளராக சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்த இடைத் தேர்தல் போராட்டம் நிறைந்த தேர்தலாகும். விஜயகாந்த் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கவா போகிறார் என சொல்லி ஆளும்கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதற்காக பல்வேறு சலுகைகளை உங்களுக்கு வாரி வழங்குகின்றனர்.
மக்கள் சொல்ல வேண்டும்...
தேமுதிகவுடன் அவர்களால் நேரிடையாக மோத முடியாது. மக்களை ஏமாற்றுவதை மட்டுமே அவர்கள் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். உங்கள் சாதனைகளை (திமுக) நீங்களே சொல்ல கூடாது, மக்கள் சொல்ல வேண்டும்.
காமராஜர் கல்விக்கு கண் கொடுத்தார். அது சாதனை. மதராஸ் மாகாணத்தை சென்னையாக மாற்றினார் அண்ணா. அது சாதனை. பள்ளி கூடத்தில் சத்துணவு தந்தார் எம்ஜிஆர். அது சாதனை. இவற்றுக்கு மத்தியில் நடக்கும் ஆட்சி செய்துள்ளது சாதனை அல்ல. அவர்கள் கொடுக்கும் வேதனை.
மக்களே உங்களுக்காகத்தான் பேசுகிறேன்..
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியால் ஏன் விலைவாசியை கட்டு படுத்த முடியவில்லை. நீங்கள் என்னை ஜெயிக்க வைக்கவில்லை. ஆனாலும் நான் உங்களுக்காக தான் பேசுகிறேன். உங்களை ஆளும் கட்சியே ஏமாற்றி வருகிறது. இந்தியாவில் வறுமை இன்னும் ஓயவில்லை. குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
காசு வாங்குவதால் என்ன லாபம்..
ஓட்டுக்காக நீங்கள் பணம் பெறுவதை நான் குறை சொல்லவில்லை. அதனால் உங்களுக்கு என்ன லாபம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் 9 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை.
அவர்கள் கூறுவதுபோல ஆட்சியில் தோனாறும், பாலாறும் ஓடவில்லை. மக்களிடையே வறுமைதான் தலை விரித்தாடுகிறது.
நான் எல்லா சவால்களையும் சந்தித்தவன். அதனால் தனியாக நிற்கிறேன். நான் காசுக்கு ஆசைபடுபவன் அல்ல. எனது தொண்டர்கள் துவளாமல் பாடுபடக் கூடியவர்கள் என்றார் விஜயகாந்த்.