சென்னை ஹோட்டலில் திருடி சிக்கிய ஊழியர் மாடியிலிருந்து குதித்து பலி
சென்னை: சென்னை ஹோட்டலி்ல் தங்கியிருந்த வெளிநாட்டு தம்பதியின் அறையில் திருடிய ஹோட்டல் ஊழியர் போலீசாரிடமிருந்து தப்பிக்க 6வது மாடியிலிருந்து குதித்ததில் பலியானார்
மதுரை அருகேவுள்ள சமயநல்லூரை சேர்ந்த சுந்தரபாண்டியன் (23) ஹவுஸ் கீப்பிங் படிப்பு முடித்துவிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஹோட்டலில் கிளீனிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் தனது மனைவியுடன் நேற்று இந்த ஹோட்டலுக்கு வந்து 6வது மாடியில் ஒரு அறையில் தங்கினார். மாலை இத் தம்பதி அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றனர்
இதையடுத்து தன்னிடம் இருந்த சாவியால் அவர்களது அறைக்குள் நுழைந்த சுந்தரபாண்டியன் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அங்கு பணம், பொருட்களை திருட முயன்றார். ஆனால் வெறும் 60 சிங்கப்பூர் டாலர்கள் மட்டு்மே இருந்தன. அதை சுந்தரபாண்டியன் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் சிங்கப்பூர் தம்பதி அறைக்கு திரும்பிவிட்டது.
அவர்கள் தங்கள் சாவியால் கதவைத் திறந்தவுடன் ஓடிவந்த சுந்தரபாண்டியன் கதவை தனது சாவியை பயன்படுத்தி்ப் பூட்டினார். அடுத்தடுத்து இரண்டு முறை இவ்வாறு இவர்கள் திறக்க முயல, சுந்தரபாண்டியன் பூட்டினார்.
இதையடுத்து தங்கள் அறையில் யாரோ இருப்பதாக தம்பதி கூச்சலிடவே ஹோட்டல் ஊழியர்கள், பாதுகவலர்கள், பக்கத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் அறை முன் கூடினர்.
உள்ளே இருப்பது சுந்தரபாண்டியன் என்று தெரியாத நிலையில் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசுக்கு தகவல் தரப்பட்டது.
இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிந்துவிட்டனர். அறைக்குள் பதுங்கியிருப்பவனை வெளியே வரும்படி கூறினர். தப்ப முயன்றால் சுட்டு விடுவோம் எனவும் போலீசார் மிரட்டினர்.
ஆனால், சுந்தரபாண்டியன் கதவைத் திறக்காததால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு துப்பாக்கிகளுடன் உள்ளே புகுந்தனர்.
இதைப் பார்த்து பயந்து போன சுந்தரபாண்டியன் அறையின் ஜன்னல்களை திறந்து 6வது மாடியில் கீழே குதித்தார். இதில் அவரது கை, கால், கழுத்து எழும்புகள் முறிந்து மயக்கமானார்.
கீழே விழுந்தது சுந்தரபாண்டியன் என்பதை அறிந்த ஹோட்டல் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்தார். அவரது சட்டைப் பையில் 60 சிங்கப்பூர் டாலர்கள் இருந்தன.
சிங்கப்பூர் தொழிலதிபர் பற்றிய விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications