சிவகாசி பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக் வாபஸ்
சிவகாசி: சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொள்வதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும் காலவரையின்றி மூடப்பட்டன. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
சிவகாசியில் கடந்த ஓரிரு மாதங்களில் அடுத்தடுத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு 25 பேர் வரை உயிரிழந்தனர்.
கடந்த மாதம் 20-ந் தேதி சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் இயங்கி வந்த ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு 18 தொழிலாளர்கள் கருகி பலியாயினர்.
இதேபோல மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் பலியானார்கள்.
இதையடுத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, முறையான அனுமதியுடன் அவை இயங்குகின்றனவா என்பதை அறிய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியில் வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வில் சில பட்டாசு தொழிற்சாலையில் அரசு விதிகள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று தெரியவந்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று காலை சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 3 பட்டாசு தொழிற்சாலைகள் விதிகளை மீறி செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மேலாளர், போர்மென் ஆகியோரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த 50-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை விடுவிக்கக் கோரினர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் விடுவித்தனர்.
இருப்பினும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி செயல்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறினர். இதை கண்டித்து சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்படும் என அவர்கள் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் நேற்று மதியத்துடன் மூடப்பட்டன.
இதையடுத்து இன்று பேச்சுவார்ததை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், திங்கள்கிழமை முதல் மீண்டும் பட்டாசு ஆலைகள் செயல்படும் எனவும் உரிமையாளர்கள் அறிவித்தனர்.