ஸ்வைன்: தமிழக அட்வைஸ்-மகாராஷ்டிரா கோபம்
சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சத்தாரா நகரங்களுக்குப் போகக் கூடாது என்று தமிழக அரசு கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சத்தாராவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே இந்த நகரங்களுக்கு தமிழக மக்கள் தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பில் ஒரு அட்வைசரி விடுக்கப்பட்டது.
இதற்கு மகாராஷ்டிர அரசு அதிருப்தியும், கோபமும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த அட்வைசரி குறித்து சுப்புராஜ் விளக்குகையில், மேற்கண்ட நகரங்களுக்குகப் போவதைத் தவிருங்கள் என்றுதான் தமிழக அரசு கூறியுள்ளது. மாறாக, போகக் கூடாது என தடை விதிக்கவில்லை.
தொற்று நோய் அதிக அளவில் பரவி வரும் பகுதிகளுக்குப் போவதைத் தவிருங்கள் என்று தனது மாநில மக்களுக்கு ஒரு மாநில அரசு அறிவுரை கூறுவதில் எந்தவிதத் தவறும் இல்லை.
இந்த இரு மாவட்டங்களுக்கும் தேவையில்லாமல் போக வேண்டாம் என்றுதான் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தொற்று நோய் பரவும் காலத்தில் அப்படிப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிருங்கள் என்று கூறுவதை உலக சுகாதார நிறுவனமே கடைப்பிடிக்கிறது. அதேசமயம் யாரும் பயணம் மேற்கொள்வதைத் தடுக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications