கோவை சிறுமி- துபாய் தொழிலாளிக்கு ஸ்வைன்?
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு வந்த நெல்லை கட்டிட தொழிலாளிக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அவர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் துபாயில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய நெல்லை ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சேகர் (35) என்பவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே போல வெளிநாட்டில் இருந்து கோவை வந்த சிறுமிக்கும் ஸ்வைன் தாக்குதல் இருப்பதாகத் தெரியவந்துள்ளதையடுத்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றி காய்ச்சல் பீதியால் பல விமான பயணிகள் மாஸ்குகள் அணிந்தபடியே வருகின்றனர்.
ஸ்வைன்: ஐசியூவில் 6 வயது சிறுமி:
இந் நிலையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது புனே சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இல்லை. அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள ஒரு டாக்டரும், பார்மசிஸ்ட்டும் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுமி, நேற்று இரவு தனியார் மருத்துவமனை ஒன்றிலிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், புனே கன்டோன்மென்ட் வாரியம், தனது வாரியத்திற்குட்பட்ட 10 பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.
3 டாக்டர்களுக்கு பன்றிக் காய்ச்சல்...
இதற்கிடையே, டெல்லியில் 3 டாக்டர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து அந்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.