வடகொரிய கப்பலை சிறைபிடித்த இந்திய கடற்படை
போர்ட்பிளேர்: அந்தமான் அருகே அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த வட கொரியக் கப்பலை இந்திய கடற்படையினர் சிறைபிடித்தனர்.
வட கொரியா நாட்டைச் சேர்ந்த எம்.வி.முசென் என்ற சரக்குக் கப்பல் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தென்பகுதியில் நங்கூரமி்ட்டு நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய கடலோர காவல்படை கடற்படைக்குத் தகவல் தந்தது. இதையடுத்து போர்ட்பிளேர் விமானத் தளத்தில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் அப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தன.
பின்னர் இந்திய கடற்படை அதிகாரிகள் கப்பலில் உள்ளவர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி பேச முயன்றனர். ஆனால் கப்பலில் இருந்தவர்கள் உரிய பதில் தரவில்லை.
இதனால் கடற்படையின் கனகலதா எனும் கப்பல் அந்த வட கொரிய கப்பலை நெருங்கியது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் தப்பிச் செல்ல முயன்றது.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்தனர். கப்பலை நிறுத்தாவிட்டால் ஏவுகணையால் தாக்குவோம் என எச்சரித்தனர்.
இதையடுத்தே அந்தக் கப்பல் நின்றது. அதிலிருந்தவர்களும் சரணடைவதாக அறிவித்தனர்.
பின்னர் அந்தக் கப்பலை இந்திய கடற்படையினர் போர்ட்பிளேர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அதில் இந்திய ராணுவத்தினர் சோதனையிட்டபோது 16,500 டன் சர்க்கரை இருந்தது.
தாய்லாந்து நாட்டில் இருந்து ஈராக் நாட்டுக்கு அந்த சர்க்கரை கொண்டு செல்லப்படுவதாகவும் ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் அதை நிறுத்தி வைத்ததாகவும் கப்பலில் இருந்தவர்கள் கூறினர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.