ஸ்வைன்: மேலும் 3 பேர் பலி-சென்னை சிறுவனுக்கும் பாதிப்பு
மும்பை: மும்பையில் பன்றிக் காய்ச்சால் பாதி்க்கப்பட்ட மேலும் இருவர் பலியாகியுள்ளனர். அதே போல குஜராத்திலும் இன்று ஒருவர் பலியானார்.
இதன் மூலம் இந்தியாவில் இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை புனேயில் 14 வயது சிறுமியான ரிதா ஷேக் இந்த நோய்க்கு பலியானார். இந் நிலையில் மும்பையைச் சேர்ந்த பாஹிமா என்பவரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
நோய் தாக்குதலையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவர் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து கஸ்தூரிபா தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார்.
அதே போல புனேவைச் சேர்ந்த சஞ்சய் கோக்லே என்ற ஆசிரியர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரும் நேற்றிரவு பலியானார்.
இந் நிலையில் அட்லாண்டாவில் இருந்து குஜராத் திரும்பிய பிரவீன் படேல் (43) என்பவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியது. இதையடுத்து இவர் அகமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பன்றிக் காய்ச்சல் நோய் புனேவிலும் மும்பையிலும் தான் மிக அதிகமாக பரவியுள்ளது. அடுத்தபடியாக குஜராத்தில் இந் நோய் பரவல் அதிகமாக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 700 பேர் வரை பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை சிறுவனுக்கு ஸ்வைன்:
இதற்கிடையே சென்னையில் 4 வயது சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் தாக்குதல் தீவிரமாக உள்ளது தெரியவந்துள்ளது. அந்தச் சிறுவனின் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பன்றிக்காய்ச்சல் நோயாளி தப்பியோட்டம்:
இந் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நகருக்கு ஓமன் நாட்டில் இருந்து விமானத்தில் முகம்மது அஸ்லாம் (21) என்ற வாலிபருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் அவர் பலராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications