வக்கீல்-போலீஸ் மோதல் வழக்கு - விலகுவதாக நீதிபதிகள் அறிவிப்பு
பிப்ரவரி 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் போலீஸார், வக்கீல்கள் மீது தடியடி நடத்திக் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிபதிகள் முகோபாத்யாயா, சந்துரு ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால் வழக்கு இழுபறியாக இருந்து வந்தது. சமீபத்தில் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், நீதிபதிகளை சந்தித்து, விரைவில் இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளும், அவர்கள் சார்பிலும் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை, விலகிக் கொள்வதாகவும், வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் இரு நீதிபதிகளும் தெரிவித்தனர். இதை தலைமை நீதிபதிக்கும் அவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தொடருவது சிக்கலாகியுள்ளது. விரைவில் வேறு பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும்.