ராகிங்-அசாம் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
குவஹாத்தி: ராகிங் கொடுமைக்கு மீண்டும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். அசாம் மாநில கல்லூரியில் படித்து வந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அசாம் மாநிலம், சோனாபூரில் உள்ள திமோரியா கலை கல்லூரியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக பிஏ முதலாம் ஆண்டு படிப்பில் சிந்துமோனி என்ற இளைஞர் சேர்ந்தார். சேர்ந்த முதல் நாளே சீனியர் மாணவர்கள் அவரை ராகிங் செய்துள்ளனர்.
ராகிங் காரணமாக மனவேதனை அடைந்த சிந்து மோனி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டு எடுக்கப்பட்டது.
இது குறித்து அந்த மாணவரின் சகோதரர் கோபிசந்த் பர்தோலி என்பவர் கூறுகையில், நேற்று வீட்டுக்கு போன் செய்து சிந்துமோனி என்னிடம் பேசினான். அப்போது கல்லூரியில் ராகிங் நடப்பதாகவும், விடுதியில் சீனியர் மாணவர்கள் மோசமாக ராகிங் செய்வதாகவும் அழுதபடியே கூறினான். அதிகாலை வரை தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தான்.
தற்போது அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவன் சாவுக்கு ராகிங் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது என்றார்.
விடுதியில் இறந்த சிந்துமோனியுடன் தங்கியிருக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கூறுகையில், அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று புத்தகம் வாங்க போவதாக கூறிவி்ட்டு நேற்று காலை விடுதியில் இருந்து கிளம்பி போனார். அதன் பின்னர் திரும்பவில்லை என்றார்.
இது குறி்த்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications