என்ஜினில் கோளாறு - நடு வழியில் நின்ற திருச்செந்தூர் ஸ்பெஷல் ரயில்
விருதுநகர்: திருச்செந்தூரிலிருந்து சென்னை கிளம்பிய வாராந்திர சிறப்பு ரயில், என்ஜின் கோளாறு காரணமாக நடு வழியில் நின்றதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்செந்தூரில் நேற்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டது.
விருதுநகருக்கு இந்த ரயில் மாலை 4 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் ரயில் விருதுநகரில் 3-வது ரயில்வே லெவல் கிராசிங் அருகே வரும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்திலேயே ரயில் நின்றது.
உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் துலுக்கப்பட்டியில் இருந்து மாற்று என்ஜினுக்கு ஏற்பாடு செய்தனர். அங்கிருந்து மாற்று என்ஜின் வந்து பின்புறத்தில் இருந்து திருச்செந்தூர் - சென்னை ரயிலை தள்ளி விருதுநகர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது.
பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
ரயில்வே லெவல் கிராசிங் அருகே வரும்போது நின்று விட்டதால் ரயிலின் வருகைக்காக அடுத்தடுத்து உள்ள 3 லெவல் கிராசிங்கிலும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரெயில், லெவல் கிராசிங்கை கடந்து செல்லாததால், எலக்ட்ரானிக் லாக்கர் முறை பயன்படுத்தப்படுவதால் இந்த 3 ரயில்வே கேட்டுகளையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரெயில் விருதுநகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபின்பு தான் அந்த 3 ரெயில்வே கேட்டுகளும் திறக்கப்பட்டன. இதனால் விருதுநகரில் 3 முக்கிய பாதைகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.