பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைகிறது
சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட ஜவுளிப் பூங்கா, விருதுநகரில் அமையவுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன், இந்த கைத்தறிப் பூங்காவுக்காக மத்திய அரசு ரூ. 70 கோடி நிதியைத் தரும். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இதேபோல மேற்கு வங்க மாநிலத்திலும் ஒரு கைத்தறிப் பூங்கா அமையவுள்ளது. இதற்கான இடத்தை மேற்கு வங்க மாநில அரசு இன்னும் தெரிவிக்கவில்லை என்றார் தயாநிதி மாறன்.
நிகழ்ச்சியில், பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழகத்தில் ஐந்து ஒருங்கிணைந்த கைத்தறிப் பூங்காக்கள் அமையவுள்ளன. அதில் ஒன்றாக, பிரமாண்ட ஒன்றாக விருதுநகர் பூங்கா அமையும். இந்த பூங்காக்கள் மொத்தம் ரூ. 475 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.
விருதுநகரைத் தேர்ந்தெடுக்கக் காரணம், மதுரை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். எனவேதான் விருதுநகர் தேர்வு செய்யப்பட்டது.
இதுதவிர சென்னையில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கழகத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கான நவீனப் பயிற்சி வகுப்பை மேற்கொள்ள மாநில அரசு ரூ. 25 கோடி நிதியை ஒதுக்கியு்ளது என்றார் ஸ்டாலின்.