டெல்லியில் டோணிக்கு பாதுகாப்பு குறைபாடு-காவலுக்கு ஒருவரும் இல்லை
டெல்லி: உடல்திறன் தேர்வுக்காக டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்துக்கு வந்த கேப்டன் டோணி உள்ளிட்ட 8 வீரர்களின் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கூட அமர்த்தப்படாததால் கிரிக்கெட் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் துவக்கத்தில் இலங்கை சென்று முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. மூன்றாவது அணியாக நியூசிலாந்து பங்கேற்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான முகாம் நேற்று டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.
இதில் கேப்டன் டோணி, ஹர்பஜன் சிங், ரெய்னா உள்ளிட்ட 8 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நட்சத்திர வீரர்களான இவர்களின் பாதுகாப்புக்காக மைதானத்தில் பெயருக்கு கூட ஒரு போலீசார் இல்லை. டோணிக்கு ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சுதந்திர தின பாதுகாப்பு சோதனைகள் போது டெல்லி தார்யா கஞ்ச் பகுதியில் கடந்த 6ம் தேதி இரண்டு ஹிஜிபுல் முகாஜிதின் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பிசிசிஐ வீரர்களின் பாதுகாப்பில் கோட்டைவிட்டது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
பிசிசிஐ தான் காரணம்...
இது குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பிசிசிஐ மற்றும் உள்ளூர் போலீசார் தான் காரணம்.
வீரர்களின் பாதுகாப்பில் பிசிசிஐ அதிக அக்கறை காட்டுவதாக இருந்திருந்தால் அது குறித்து முதலிலே எங்களுக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் நினைக்கும் நேரத்தில் அனைத்து கிரிக்கெட் சங்கங்களும் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. இது மிகவும் கடினம்.
டெல்லியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டது எங்களுக்கு தெரியாது. இது குறித்து உள்ளூர் போலீசார் எங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. இதனால் சில கதவுகளை மூடிவிட்டு, வீரர்களுக்கு பயிற்சிக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்தோம் என்றார்.
எங்களுக்கு தெரியாது-போலீஸ்...
இது குறித்து டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஜஸ்பால் சிங் கூறுகையில், இந்திய அணி டெல்லி முகாமில் கலந்து கொள்வது எங்களுக்கு தெரியாது என்றார்.