மோசமாகும் வறட்சி நிலை - பிரதமர் அவசர ஆலோசனை
டெல்லி: நாட்டில் வறட்சி நிலை மேலும் மேலும் மோசமாகி வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், 13வது நிதிக் கமிஷன்த லைவர் விஜய் கெல்கர் மற்றும் திட்டக் கமிஷன் செயலாளர் சுதா பிள்ளை ஆகியோருடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
வறட்சியின் பாதிப்பு, இது பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
பருவ மழை தவறியதால் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களுமே வறட்சி நிலையை சந்தித்து வருகின்றன. இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே சனிக்கிழமை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வறட்சி நிலையை சமாளிக்க மாநில அரசுகள், தேசிய பேரிடர் நிதியிலிருந்து தேவையான அளவுக்கு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளாம் என்று அறிவுறுத்தினார்.
இந்தியாவில் தற்போது மொத்தம் உள்ள 600 மாவட்டங்களில் 141 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி குறையாது - பிரணாப்
இதற்கிடையே, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் 161 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஜிடிபியை எட்டுவது சாத்தியம் என்று அரசு உறுதியாக நம்புகிறது. வறட்சியால் வளர்ச்சி குறையாது என்றும் அரசு நம்புகிறது என்றார்.