மலேசிய பேட்மிண்டன் பயிற்சியாளருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி - பீதி
ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மலேசிய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் மிஸ்பன் சிடெக். இவருக்கு நேற்று பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தோன்றியதால் உடனடியாக அவர் ஹாப்கின் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு பன்றிக் காய்ச்சல் சோதனைகள் நடத்தப்பட்டன.
அவரது ரத்தத்தில் எச்1என்1 வைரஸ் பரவியுள்ளதா என்பதை அறிய சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளரும், போட்டிக்கான ஒருங்கிணைப்புக் கமிட்டியின் இயக்குநருமான புல்லேலா கோபிசந்த் கூறுகையில், நேற்று மாலை தொண்டை வலிப்பதாக சிடெக் தெரிவித்தார். இதையடுத்து அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறோம் என்றார்.
ஆறு நாள் நடைபெறும் உலக பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க 42 நாடுகளைச் சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் ஹைதராபாத் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.