ஸ்வைன்: மதுரை, கோவை, நெல்லையில் சோதனை மையம் அமைக்க கருணாநிதி உத்தரவு
சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் புதிதாக 3 சோதனை மையங்களை ஏற்படுத்த அவர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பன்றிக் காய்ச்சல் தமிழகத்திலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு சிறுவன் உயிரிழந்தான்.
இதையடுத்து இதுதொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.
இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களிலும் நோய் கண்டறியும் சோதனை மையங்களை ஏற்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
மக்களிடையே நோய் குறித்த பீதியைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளுமாறும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மக்கள் பன்றிக் காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதுகுறித்து சுகாதாரத் துறைக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உயிரிழப்பைத் தடுக்க அனைத்துத் தரப்பினரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications