மின்னணு இயந்திர மோசடி-நிரூபிக்க பாமகவுக்கு உத்தரவு
மின்னணு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும். எனவே இதை தேர்தல் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை தமிழகத்தில் அதிமுகவும், பாமகவும் தீவிரமாக கூறி வருகின்றன. பாஜகவும் இதைக் கூறி வருகிறது.
ஆனால் பாமகதான் இதில் மிகத் தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக புகார் கூறுவோர் நேரில் வந்து நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் கூறியிருந்தது. ஆனால் ஒருவரும் போய் நிரூபிக்கவில்லை.
இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை. எனவே தேர்தல்களில் இது தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யலாம். இதை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
இதை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், வரும் 27ம் தேதி தேர்தல் ஆணையத்தை அணுகி தனது குற்றச்சாட்டை பாமக நிரூபிக்க வேண்டும். மோசடி செய்ய முடியும் என்பதை பாமக நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.