பர்கூர்- வெளியூர் ஆட்களை வெளியேற்றுங்கள்-அதிமுக
கிருஷ்ணகிரி: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பர்கூர் தொகுதியில் இருக்கும் வெளி மாவட்டத்தினரை உடனடியாக வெளியேற்ற வெண்டும் அதிமுக கொ.ப.செ. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் கரூர் எம்.பியுமான தம்பிதுரை நேற்று அவரது சொந்த ஊரான சிந்தகம்பள்ளியில் அதிமுகவினருடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் தேர்தல் பார்வையாளர் அனந்த் கிஷோரை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பர்கூர் தொகுதியில் வெளிமாவட்டத்தினர் அதிக அளவில் தங்கி உள்ளனர். அவர்களை உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும். அதிமுக தொண்டர்களை மிரட்டும் விதமாக தற்போது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர்.
சிந்தகம்பள்ளியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காத நிலையில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது ஆளும் திமுகவின் அராஜக செயலைக் காட்டுகிறது.
தேர்தலில் மாநில அரசு தனது எந்திரங்களை முறை கேடாக பயன்படுத்துகிறது. அதை தேர்தல் பார்வையாளர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.