பன்றிக் காய்ச்சல் பீதியால் பள்ளிக்கு மாணவர் வருகை குறைந்தது
சென்னை: பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக சென்னை நகரில் பள்ளிகளுக்கு வரும், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சிறுவன் சஞ்சய் இறந்ததைத் தொடர்ந்து சென்னை நகரில் பன்றிக் காய்ச்சல் பீதி அதிகரித்து விட்டது. குறிப்பாக சஞ்சய் வசித்து வந்த வேளச்சேரி பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
தங்களது குழந்தைகளை கூட்டிக் கொண்டு ரத்தப் பரிசோதனைக்கு சென்றவண்ணம் மக்கள் உள்ளனர். மேலும், பீதி காரணமாக, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பவும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.
பள்ளிகளில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் நோய் இருந்து அது தங்களது குழந்தைகளுக்கும் பரவி விடுமோ என்ற அச்சமும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. டி.ஏ.வி. பள்ளி நிர்வாகமும் தங்களது குழுமத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்தது.
இந்நிலையில் வேலம்மாள் பள்ளி நிர்வாகமும் தங்களது குழுமத்தின் 5 பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. முகப்பேர் வேலம்மாள் பள்ளி, சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி, சதர்ன்பால் பள்ளி, முகப்பேர் வேலம்மாள் வித்யாலயா பள்ளி, ஒரகடம் வேலம்மாள் பள்ளி ஆகிய 5 பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதிக்கு பின்னரே இப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
காய்ச்சல் குணமாகும்வரை இது போன்ற மாணவர்களுக்கு கட்டாய விடுப்பும் அளிக்கப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே தனிமையில் அமர வைக்கிறார்களாம். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சிக்கலைத் தவிர்க்கவும், தேவையில்லாத அச்சத்தைத் தவிர்க்கவும் மகாராஷ்டிராவில் அறிவித்ததைப் போல சென்னைக்கும் பள்ளிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
--












Click it and Unblock the Notifications