விஜயசாந்திக்கு எதிராக தெலுங்கானா கட்சியில் போர்க்கொடி
ஹைதராபாத்: கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் விஜயசாந்தியை நீக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகையுமான விஜயசாந்தி நாடாளுமன்ற தேர்தலில் மேதக் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்றார்.
ஆனால், சமீபகாலமாக அவருக்கும், கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் இடையில் அதிருப்தி நிலவுகிறது. இதை விஜயசாந்தி தான் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதாக வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் கடந்த மாதம் இறுதியில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் காங்கிரசில் சேரப்போவதாக கூறப்பட்டது. ஆனால், அதை விஜயசாந்தி மறுத்துவிட்டார். என்றாலும் அவர் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகியே இருந்து வருகிறார். கட்சி கூட்டங்கள் எதற்கும் செல்வதில்லை.
சமீபத்தில் நடந்த கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். இது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் நரசிம்ம ரெட்டி கூறுகையில்,
விஜயசாந்தி கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் கட்சி தலைவர்களுடன் தேவையற்ற மோதல் போக்கை உருவாக்கி வருகிறார் என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
விஜயசாந்தி கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தெலுங்கானா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றதால் அவர் தானாக முன் வந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications