பிள்ளை பிடிக்கும் கும்பலாகிவிட்ட திமுக-பண்ருட்டி
கோவை: பிள்ளை பிடிக்கும் கும்பலைப் போல திமுக மாறி விட்டது. பிற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் திமுகவின் போக்குக்கு இடைத் தேர்தலில் வாக்காளர்கள் முடிவு கட்ட வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கே.கே.புதூரில் நடந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்எல்ஏக்களை திமுக விலைக்கு வாங்கப் போவதாகவும், ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.1 கோடி வரை தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளை பிடிப்பதுபோல, எம்எல்ஏக்களை பிடிக்கும் செயல் அரசியலிலும் இங்கு வந்துவிட்டது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் திமுகவின் செயலுக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.
திமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை காட்டி மிரட்டுவது, பணம் கொடுத்து ஆசை காட்டுவது என ஆளும் கட்சி அராஜகம் செய்து வருகிறது.
சாதனைகளை நம்பி தேர்தலில் திமுக நிற்கவில்லை. பணத்தை நம்பித் தான் நிற்கிறது. எனவே ஒரு வாக்குக்கு ரூ.500 கொடுக்க வரும் அரசியல்வாதிகளிடம் வாக்காளர்கள் ரூ.50,000 கேட்க வேண்டும்.
1998ல் நிறைவேற்றப்பட வேண்டிய ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதற்கு கருணாநிதி தான் காரணம். 1998ல் இத் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் இப்போது கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது.
மாற்றம் ஏற்படுவது இயற்கை. மாற்றம் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த தேமுதிகவால் மட்டுமே இயலும் என்றார்.