ஜெ.வை மக்கள் புறக்கணிப்பார்கள்-ஸ்டாலின்
கோவை: இடைத்தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவை மக்கள் விரைவில் புறக்கணிப்பார்கள் என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக்ததில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை திமுகவினர் சுறுசுறுவென மேற்கொண்டனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொண்டாமுத்தூர் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரசின் எம்.என்.கந்தசாமியை ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,
மக்களை சந்திக்க விருப்பமில்லாதவர்...
ஜெயலலிதா மக்கள் நேரிடையாக சந்திக்க விருப்பம் இல்லாதவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்தவர்.
ஜனநாயகத்தில் தேர்தல் முதன்மையானது, ஜனநாயகத்தின் அடிப்படையே தேர்தல் தான். ஜெயலலிதா மக்கள் மீது அக்கறை இல்லாதவர். அதனால் தான் தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். அவர் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை.
டெபாசிட் கூட கிடைக்காது...
தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் தான் போட்டியிடவில்லை என்பதே உண்மை. ஆனால் அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக கூறி வருகிறார். தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவை தமிழக மக்கள் வெகு விரைவில் புறக்கணிப்பார்கள்.
ராமதாஸ் காணாமல் போய்விட்டார்...
கடந்த தேர்தல் வரை தங்களது ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெற்றிபெற முடியது என்று தம்பட்டம் அடித்து வந்த ராமதாஸ், தற்போது எங்கு போனார் என்றே தெரியவில்லை. வைகோவும், மதிமுகவும் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
நேற்று அரசியலுக்கு வந்தவர் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை நடத்த வாழ்வாதாரமாக இருக்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதை வேண்டாம் என்கிறார்.
இந்தியாவில் எங்கும் செயல்படுத்த முடியாத, எந்த மாநில அரசுகளாலும், எந்த ஒரு அரசியல் கட்சியினாலும் அறிவித்து, செயல்படுத்த முடியாத ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் அற்புத திட்டத்தை கலைஞர் தான் தமிழகத்தில் வெற்றிகரமாக ஏழை, எளிய மக்கள், தாய்மார்களின் உள்ளம் குளிர செயல்படுத்தி வருகிறார்.
நேற்று கட்சி... இன்று முதல்வர் ஆசை...
நேற்று கட்சி ஆரம்பித்தவருக்கு மக்களின் தேவைப்பற்றி என்ன தெரியும்? நேற்று அரசியலுக்கு வந்தவிட்டு, இன்றே முதல்வராகிவிட வேண்டும் என்றும், அதையே தனது லட்சியமாக கருதுபவருக்கு ஏழை, எளிய மக்களின் நலன் பற்றி அக்கறை ஏது? கவலை ஏது?
பொதுவாக, எந்த ஒரு திட்டத்தையும் குறை சொல்வது என்பது எளிது. ஆனால், நடைமுறைபடுத்துவது என்பது தான் கடினம்.
சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை, அறிந்து மக்கள் பயன்பெற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் திமுக அரசிற்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்து வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கேட்டு விடைபெறுகிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications