தா.பாண்டியனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டிருப்பதாக அக் கட்சி கூறியுள்ளார்.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எரிக்கப்பட்டது. அதில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று அதிகாலை தா.பாண்டியன் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்று விட்ட நிலையில் அவரது வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் ஜன்னலில் எட்டிப் பார்த்திருக்கிறார்.
வீட்டில் இருந்தவர்கள் அந்த நபரைப் பார்த்து கூச்சலிட்ட பின் அவர் தப்பியோடிவிட்டார். கடந்த சில நாட்களாகவே நள்ளிரவில் அவரது வீட்டின் முன் மர்ம நபர்கள் நடமாடியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து அவருக்கு இவ்வாறான அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை.
தா.பாண்டியன் வீட்டில் நடந்துள்ள இந்த நிகழ்ச்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.