புதுச்சேரியில் 3 பேருக்கு ஸ்வைன் ப்ளூ
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இது குறித்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சுப்பாராவ் நிருபர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை வாயிலாக இதுவரை 28 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய சென்னையிலுள்ள கிங்ஸ் நிறுவனத்துக்கு ரத்த, சளி மாதிரிகள் அனுப்பப்பட்டன.
இதில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளது சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று புதுச்சேரிக்குத் திரும்பி வந்த 60 வயது முதியவர், பெற்றோரைப் பார்க்க புதுவைக்கு வந்த புனேவைச் சேர்ந்த 22 வயது மாணவி, புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றிக் காய்ச்சல் சோதனைகள் செய்வதற்கான வசதியை ஜிப்மர் மருத்துவமனையிலேயே உருவாக்கி வருகிறோம். சோதனை செய்வதற்கான உபகரணங்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூலம்தான் வர வேண்டும். ஆனால், அவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால்தான் இங்கு இப்போதைக்கு பரிசோதனை நடத்த முடியவில்லை என்றார்
சிங்கப்பூரில் சென்னை வந்த மூவருக்கு ஸ்வைன்?
இந் நிலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை சோதனை செய்ய டாக்டர்கள் சிறப்பு குழு நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லித்தின் (32), தூத்துக்குடியை சேர்ந்த குருசாமி (30), தஞ்சாவூரை சேர்ந்த சாமிநாதன் (40) ஆகியோருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டன.
இதையடுத்து மூவரும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் பன்றி காய்ச்சல் உள்ளதா என்பது உறுதியாகும்.