சென்னை நோகியா நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை: சம்பள உயர்வு கோரி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோகியா தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 8,000 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் தான் இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தது. ஆனால், அது போதுமானதாக இல்லை என கூறி ஊழியர்கள் கடந்த 14ம் தேதி மதியம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வை கூடுதலாக கேட்டு நடந்த இந்த போராட்டத்தில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தனர். ஆனாலும் சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ஆனால், நோகியா நிறுவன அதிகாரிகள் வெகு சிலரே ஊழியர்களே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், உற்பத்தி பெரிதாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் வரும் 24ம் தேதிக்குள் நிர்வாகமும், தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையத் தீர்க்குமாறு தொழிலாளர் நலத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இல்லாவிட்டால் தொழிலாளர் ஆணையம் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முடிவு காணப்படும் என அந்த ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தங்களது வேலைநிறுத்தம் குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், கடந்த முறை பொருளாதார நெருக்கடி என கூறி சம்பளத்தை அதிகரிக்க மறுத்துவிட்டனர். இம்முறை நான்கு ஆண்டு அனுபவ கொண்ட ஊழியர்களுக்கு ரூ. 1,400ம், பயிற்சியில் இருக்கும் ஊழியர்களுக்கு ரூ. 200ம் சம்பள உயர்வு கொடுத்துள்ளனர். இது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.