பணம் கொடுக்க திமுகவினர் திட்டம்-விஜய்காந்த்
தொண்டாமுத்தூர்: இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் நாளன்று ஓட்டுச் சாவடிக்கு அருகே பூத் ஸ்லிப் கொடுப்பது போல் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த விஜயகாந்த் கூறுகையில்,
இந்த தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தல் தானாக வந்த தேர்தல் அல்ல, இது வரவழைக்கப்பட்ட தேர்தல். ஏற்கனவே இங்கு எம்எல்ஏவாக இருந்தவர் (மு.கண்ணப்பன்) அதிமுக மற்றும் மதிமுகவின் வெற்றியை வீணடித்து விட்டு, கட்சி மாறி திமுகவுக்கு சென்றுள்ளார்.
அவர் ஏன் திமுகவுக்கு சென்றார்?. தன்னுடைய சொத்தை காப்பாற்றுவதற்காகத்தான்.
ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என்கிறார்கள். ஆனால், பருப்பு விலை 100 ரூபாய். இதுதான் திமுக அரசின் சாதனை. சாதனைகளை செய்துள்ளோம் என்று சொல்லும் திமுக, ஓட்டுக்கு ஏன் பணம் கொடுக்கிறது?.
இந்தத் தொகுதியில் 10 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் பொது மக்களிடம் வந்து உங்களுக்கு சாலை வசதி இருக்கிறதா?, சுகாதார வசதி இருக்கிறதா?, விவசாயம் எப்படி இருக்கிறது என்று ஏதாவது ஒரு குறை கேட்டார்களா?. மக்கள் பிரச்சனையை கேட்காத இவர்கள் அமைச்சர்களே அல்ல, அரசியல் வியாபாரிகள்.
தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, வறுமையை ஒழித்தாரா?. இடைத் தேர்தல் நடக்கும் 5 தொகுதியிலும் இப்போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. 18ம் தேதிக்கு பின் தினமும் 5 மணி நேரம் தான் கரண்ட் இருக்கும்.
இடைத் தேர்தல் முடிந்ததும் சில நாட்களில் இந்த அரசு பால் விலையையும், மின்சார கட்டணத்தையும் உயர்த்தப் போகிறது.
இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு கூட்டணிக் கட்சியான காங்கிரசும் ஜால்ரா போடுகிறது. காங்கிரஸ் என்பது ஒரு பணக்காரக் கட்சி. தேர்தல் முடியும் வரை தான் காங்கிரஸ்காரர்களை நீங்கள் பார்க்கவே முடியும். அதற்கு பின்னர் அவர்களை வலைபோட்டு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.
நான் சட்டசபைக்கு நான் செல்வதே இல்லை என்று குறை கூறுகிறார்கள். நான் சட்டசபைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன். 91ம் ஆண்டு திமுகவில் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். அவர் அப்போது ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை?.
தேர்தல் நாளன்று ஓட்டுச் சாவடிக்கு அருகே பூத் ஸ்லிப் கொடுப்பது போல் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு இங்கு முகாமிட்டுள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட வெளி ஆட்களை இன்று மாலையே இங்கிருந்து வெளியேற்ற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.