கலப்பு திருமணங்களை ஆதரிக்கிறோம்-ஆர்எஸ்எஸ்
சென்னை: கலப்புத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரிப்பதாக அதன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்து சமுதாயத்தில் தீண்டாமையை ஒழிக்க ஆர்எஸ்எஸ் தீவிரமாக பாடுபட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எந்த ஜாதி வேறுபாடும் பார்க்காமல் அனைவருடனும் சகஜமாக பழகி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் குடும்பங்களில் இப்போது அதிகமான அளவில் கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. கலப்புத் திருமணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம், ஊக்குவிக்கிறோம்.
கடந்த 83 ஆண்டுகளாக ஒற்றுமை மற்றும் மனிதப் பண்புகளை வளர்க்கும் பணியில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டு வருகிறது.
ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி உள்பட இந்தியாவின் பாரம்பரியம், ஒழுக்கத்துக்கு எதிரான எந்தச் சட்டத்தையும் நாங்கள் எதிர்ப்போம்.
தானாக விரும்பி ஒருவர் மதம் மாறினால் அதனை எதிர்க்க மாட்டோம். அதே நேரத்தில் ஆசைகாட்டி அல்லது கட்டாயப்படுத்தி மதம் மாற்றினால் அதனை அனுமதிக்க மாட்டோம்.
முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் உள்பட அனைவருமே இந்தியர்கள் தான். ஆர்எஸ்எஸ் எந்த சமூகத்துக்கும் எதிரானதல்ல.
ஆர்எஸ்எஸ் என்ற பெயர் மிகவும் பிரபலமாக இருந்தாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்த அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.
பாஜக சுயேச்சையான, சுதந்திரமான ஓர் அரசியல் கட்சி. ஆர்எஸ்எஸ் இந்து சமுதாயத்துக்காகப் பாடுபட்டு வரும் அரசியல் சார்பற்ற அமைப்பு. இரண்டும் தனித்தனியான அமைப்புகள். பாஜகவை ஆர்எஸ்எஸ் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பலர் பாஜகவில் உள்ளனர். அவ்வளவு தான், மற்றபடி அக் கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை.
தேர்தல் தோல்வி குறித்து பாஜகதான் ஆராய வேண்டும். இழந்த செல்வாக்கை மீட்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அயோத்தியில் இப்போது சிறிய அளவில் ராமர் ஆலயம் உள்ளது. அதனை மிகப்பெரிதாக கட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார் பகவத்.
இந்தியாவை பிளக்க சீனா திட்டம்-வி.எச்.பி:
இந் நிலையில் ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம்,
மத, இனப் பாகுபாடின்றி வலிமையான ஜனநாயக நாடாக விளங்கிவரும் இந்தியாவை சீனாவுக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவைத் துண்டாட என்று சீனா கருதுகிறது.
இலங்கையில் ராணுவ தளம் அமைத்து வரும் சீனா, உல்பா, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு தனது நாட்டில் பயிற்சி அளித்து ஆயுத உதவி செய்து வருகிறது.
பஞ்சசீலக் கொள்கையை புறக்கணித்து 1962ல் இந்தியாவின் பெரும் பகுதியை சீனா ஆக்கிரமித்தது. ஆனால் மத்திய அரசு இப்போது, சீனாவுடன் நட்புறவு கொள்ள முயல்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications