இலங்கை முகாம்களில் வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்
இலங்கையின் வட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. மேலும் முகாம்களுக்குள்ளும் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாகியுள்ளது.
தற்காலிகக் கூடாரங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர். திறந்த வெளியில்தான் அவர்கள் சமைத்து வருவதால், மழை நீர் தேங்கிக் கிடக்கும் காரணத்தால் அவர்களால் சமைக்கக் கூட முடியவில்லை.
தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் தமிழர்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை நிலை மிக மிக மோசமாக இருப்பதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால், தமிழர்களின் நிலை மிக மிக மோசமாகி விடும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து வவுனியாவைச் சேர்ந்த அரசு அதிகாரி சார்லஸ் என்பவர் கூறுகையில், 500க்கும் மேற்பட்டோர் மேடான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சாப்பாடும், பிற அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகிறது.
மாணிக் பார்ம் முகாமில் உள்ள ஒரு பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மழை நீர் வடிகால் வசதி சரிவர இல்லாததால் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றார்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வேறு பகுதிக்கு மாற்றுவதற்காக கூடுதல் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனராம்.













Click it and Unblock the Notifications