2 அண்ணாமலை பல்கலை. மாணவர்களை கடத்தல்-பத்திரமாக மீட்பு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இரண்டு மாணவர்களை கடத்தி ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய பெங்களூர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சந்தீப்குமார் (23), அபிஷேக் (22) என்ற பிகார் மாநிலத்தை இரண்டு சகோதரர்கள் முதல் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களது நண்பர் ஒருவருக்கு விவசாய கல்லூரியில் சீட் வாங்கி தருமாறு தங்களது உறவினர் அரவிந்த் சிங் என்பவர் மூலம் பெங்களூரை சேர்ந்த செளரவ் மிஸ்ரா என்பவரை தொடர்பு கொண்டனர். இதற்காக அவருக்கு ரூ. 29,000 கொடுப்பதாக கூறியுள்ளனர்.
முதலில் ஒப்பு கொண்ட செளரவ் மிஸ்ரா. பின்னர் கூடுதல் தொகை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சந்தீப் குமார் மற்றும் அபிஷேக் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சிதம்பரம் வந்த செளரவ் மிஸ்ரா, தான் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு வரும்படி சந்தீப் குமாரிடம் கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த சந்தீப்குமாரை மிஸ்ராவும் அவருடன் இருந்த கும்பலும் காரில் பெங்களூருக்கு கடத்தி சென்றுவிட்டனர். மீண்டும் சிதம்பரம் வந்த அந்தக் கும்பல் அபிஷேக்கையும் கடத்திச் சென்றது.
பின்னர் அரவிந்த் சிங்கை போனில் தொடர்பு கொண்ட மிஸ்ரா, இரண்டு மாணவர்களும் உயிரோடு விடுவிக்க ரூ. 5 லட்சம் கொடுக்குமாறு மிரட்டினார்.
இந்நிலையில் சந்தீப் குமார், செளரவ் மிஸ்ரா கும்பலிடமிருந்து தப்பி சிதம்பரம் வந்தார். இதைத் தொடர்ந்து சந்தீபும், அரவிந்த் சிங்கும் சிதம்பரம் போலீசில் நடந்த விஷயங்களைக் கூறவே போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
போலீசாரின் ஆலோசனையின் பேரில் தப்பி வந்த சந்தீப் குமார், மிஸ்ராவுக்கு போன் செய்து சிதம்பரம் வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறினர். இதையடுத்து சிதம்பரம் வந்த மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் பிடிபட்டிரு்த அபிஷேக்கையும் பத்திரமாக மீட்டனர்.