உள்நாட்டு பாதுகாப்பு செலவு: 'மத்திய அரசே ஏற்க வேண்டும்'- கருணாநிதி
டெல்லியில் இன்று உள்நாட்டு பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உளவுப் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்ற இக் கூட்டத்தி்ல் தமிழகத்தின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்குப் பதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளர் மாலதி, டிஜிபி ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் கருணாநிதியின் உரையை, மு.க.ஸ்டாலின் வாசித்தார். அவர் கூறுகையில்,
உள்நாட்டுப் பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே வழங்க வேண்டும், ஏற்க வேண்டும்.
மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும் அதி விரைவு படைகளுக்குத் தேவையான வீரர்களுக்காக ஆகும் செலவுகளையும், பயிற்சி உள்ளிட்டவற்றையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.
இப்படிப்பட்ட உதவிகள் இல்லாவிட்டால், மாநில அரசுகள் மேற்கொள்ளும் திறமையான, பணிகளுக்கு பலன் இல்லாமல் போய் விடும். உண்மையில் இது மாநில அரசுகளைத் தண்டிப்பது போலாகும்.
அதேபோல காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றார்.