ஸ்வைன்..ஆந்திரா.. 3 பேர் ஊரைவிட்டு விரட்டியடிப்பு
ஹைதராபாத்: பன்றி காய்ச்சல் பீதி காரணமாக மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மூன்று பேரை அந்த ஊர் மக்கள் ஓட ஓட அடித்து விரட்டிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் தாளபேட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சங்கரமா என்பவரி்ன் மகன்கள் மகேஷ், ரமேஷ். அடிலாபாத் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயத்தை நம்பியிருந்த இவர்கள் மும்பை சென்று பிழைப்பு நடத்த முடிவு செய்தனர்.
ஆனால், இவர்களது துரதிருஷ்டம் அங்கும் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் அங்காங்கே மழை பெய்து வருவதை கேள்விப்பட்ட இவர்கள் தங்கள் ஊரிலும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையுடனும், வேறு வழியில்லாத காரணத்தாலும் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில் இவர்கள் மூவரும் கிராமத்துக்குள் வரும் செய்தியை கேள்விப்பட்ட கிராம மக்கள் அவர்களை ஊருக்கு நுழைய அனுமதி மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ஊர் நாட்டாண்மை, நீங்கள் மூவரும் மும்பைக்கு சென்று வந்துள்ளீர்கள். அங்கு பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதை நாங்கள் செய்தித்தாள்களில் படித்தோம். நீங்கள் ஊருக்குள் வந்தால் எங்களுக்கு பன்றி காய்ச்சல் வந்துவிடுவோம். அதனால் உங்களை ஊரைவிட்டு தள்ளி வைக்கிறோம். ஊரைவிட்டு வெளியேறுங்கள் என்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரமா தாங்கள் மூவருக்கும் பன்றி காய்ச்சல் இல்லை என எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால், அங்குள்ளவர்கள் அதை கேட்டுகும் நிலையில் இல்லை. இதையடுத்து சங்கரமா இது எனது சொந்த ஊர் அப்படித்தான் வருவேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு. சங்கரமா மற்றும் அவரது இரண்டு மகன்களை ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.