'திருமதி'-கருணாநிதிக்கு எதிராக அதிமுக போராட்டம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை கருணாநிதி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிமுக மாநில மகளிரணிச் செயலாளர் வளர்மதி கூறினார்.
திமுக ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று சொல்லும் ஜெயலலிதாவை "திருமதி' என்று தான் கூறுவேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக மகளிரணி சார்பில் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் வளர்மதி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் போர்ப்படையே மகளிரணிதான். 96 திமுக எம்எல்ஏக்களே கருணாநிதி அரசை மைனாரிட்டி அரசு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்?.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரசியல்ரீதியாக கேட்கும் கேள்விகளுக்கு அரசியல்ரீதியாக பதில் சொல்வதை விட்டுவிட்டு அவரை "திருமதி'' என்று கூறி கருணாநிதி இழிவுபடுத்துகிறார்.
எங்கள் தலைவி புரட்சித் தலைவி அம்மாவை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
ஜெவுக்கு எதிராக போராட்டம்:
இதற்கிடையே திமுக அரசை மைனாரிட்டி ஆட்சி என்று கூறும் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையி்ல், திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று சொல்லி கொச்சைப்படுத்தும் ஜெயலலிதா, முடிந்தால் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை அகற்ற முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்த தன்னை திருமதி என்று சொன்னதற்காக ஆர்பாட்டம் என்றால், திமுகவை மைனாரிட்டி அரசு என்று சொல்லும் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கூறியுள்ளார்.