பூத் ஸ்லிப் கொடுப்பதில் தகராறு-திமுக, தேமுதிகவினர் மோதல்
கம்பம்: கம்பத்தில் பூத் ஸ்லிப் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கம்பம் ஏல விவசாய சங்க மேல் நிலைப்பள்ளியில், இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கி நடந்து கொண்டிருந்தது. பள்ளிக்கு அருகே திமுகவினர் பூத் ஸ்லிப் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு தேமுதிக நகரச் செயலாளர் அய்யர் தலைமையில் சிலர் வந்தனர். திமுகவினரிடம் இங்கு வைத்து பூத் ஸ்லிப் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டனர். இதையடுத்து தேமுதிகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திமுகவினர் சேர்ந்து, தேமுதிகவினரைத் தாக்கினர். இதில், தேமுதிகவைச் சேர்ந்த சலீம் மற்றும் அஜீஸ் ஆகிய இருவர் காயமடைந்தனர்.
விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்த நிலையில் இருந்த அஜீஸையும் சலீமையும், கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் விரைந்து வந்தார். இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம், தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று தேமுதிகவினர் கோரினர்.
புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் எஸ்.பி. உறுதியளித்தார். இதையடுத்து தேமுதிக சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
திமுகவினர் ரகளை-போலீஸ் தடியடி:
இந்த நிலையில் காயமடைந்த இரு தேமுதிக தொண்டர்களையும் பார்க்க வேட்பாளர் அருண்குமார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது தேமுதிகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து அதிரடிப்படை போலீஸார் விரைந்து வந்தனர். திமுகவினரை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து போகாமல் அதிரடிப் படையினரிடமே மோத முயன்றனர்.
இதைப் பார்த்த போலீஸார், திமுகவினரை தடிகளால் அடித்து விரட்டியடித்தனர். இதில் நான்கு திமுகவினர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் கம்பத்தில் பதட்டம் ஏற்பட்டது.