தாக்கும் தமிழக அதிகாரிகள்-கேரள லாரி டிரைவர்கள்
செங்கோட்டை: கேரள லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மீது தமிழக அரசு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி வரும் 20ம் தேதி பஸ்களை தவிர மற்ற போக்குவரத்து வாகன ஊழியர்கள் தேசிய நெடுச்சாலை 208ல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து கேரள மாநில கொல்லம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் சங்க நிர்வாகிகளான வர்கீஸ், மனோஜ் கோபி, மாத்தி குட்டி, மனோஜ் குமார் ஆகியோர் கூறுகையில்,
கேரள மாநில லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை தமிழக போலீசாரும், சோதனை சாவடி அதிகாரிகளும் ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் மணல், பாறை பவுடர், சிறிய மற்றும் பெரிய ஜல்லி கற்களை ஏற்றி வரும் லாரி தொழிலாளர்கள் மீது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்தாலும் இல்லாவிட்டாலும் கேரள மாநிலத்திற்கு வந்து செல்லும் லாரிகள் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதே போன்று மணல் ஏற்றி வரும் தமிழக லாரிகளுக்கு குறைந்த கட்டணமும், கேரள மாநில லாரிகளுக்கு கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.
புகார் ஏற்க மறுப்பு...
இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் புகார் செய்தபோது அவர் சரியான பதில் கூறாததோடு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராதவர்களின் புகார் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலாது என தெரிவித்து விட்டார். இது அவரது சொந்த கருத்தா, இல்லை தமிழக அரசின் கருத்தா...
இருமாநில அதிகாரிகளும் இப்பிரச்சனைக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் வரும் நாட்களில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். இது இரு மாநிலங்களுக்கு இடையே வீண் பிரச்சனையை உருவாக்கும்.
வரும் 20ம் தேதி திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கேரள எல்லையில் கேரள மாநில பகுதியான ஆரியங்காவில் பஸ்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
அச்சுதானந்தனிடம் மனு...
மேலும் கேரள லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தமிழக அரசு உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வர் அச்சுதானந்தனனுக்கும், மத்திய அரசுக்கும், லாரி, டெம்போ, டிம்பர் தொழி்லாளர்கள் சங்க சிஐடியூ தலைவர் ஜெயசந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் என்றனர்.












Click it and Unblock the Notifications