சென்னை மாநகருக்கு மேலும் 100 ஏசி பஸ்கள்
சென்னை: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 100 ஏசி பஸ்களை வாங்கவுள்ளதாக போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னையில் மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ.சி. பஸ்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மேலும் மேலும் 100 வால்வோ ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட உள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனகள், கல்வி நிறுவனங்கள் ஏராளம் உள்ள ராஜீவ்காந்தி எக்ஸ்பிரஸ் சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இந்த ஏ.சி.பஸ்கள் இயக்கப்படும்.
சென்னையில் பறக்கும் ரயில் நிலையங்களுக்கு மேலும் பஸ் வசதியை அதிகரிப்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது பூங்கா, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட 11 பறக்கும் ரயில் நிலையங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், கலங்கரைவிளக்கம் ஆகிய பறக்கும் ரயில் நிலையங்களுக்கு மாநகர பஸ் சேவைகள் புதிதாக இயக்கப்படுகின்றன என்றார்.