சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம்: சாமி
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு தலையிட முடியாது. காரணம், அந்தக் கோவில், தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துமூலமான வாதத்தில் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கடந்த 1987ம் ஆண்டு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சுப்ரமணியம் சாமி தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அவர் எழுத்துப் பூர்வமாக தனது வாதத்தைப் பதிவு செய்யலாம் என நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
அதன்படி சாமி சார்பில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
நடராஜரே தீட்சிதர்தான்...
அதில் சாமி கூறியிருப்பதாவது:
சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்களில் ஒருவர். சிதம்பரம் நடராஜர் ஆலயம் பொது தீட்சிதர்களுக்கே சொந்தமானது.
மத நம்பிக்கைகள் தொடர்பாக அரசியல் சட்டம் சில உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது. அரசாணையின் மூலம் இந்த உரிமைகளை எடுத்துக் கொள்ள முடியாது.
சட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.
பொது தீட்சிதர்கள் சமூகத்துக்கு இந்தக் கோயில் சொந்தமானது. சிதம்பரம் நடராஜர் ஆலய விழாக்கள், சடங்குகள் மற்றும் சொத்துகள் நிர்வாகத்தில் பொது தீட்சிதர்கள் சமூகத்தினர் முழுமையான தன்னாட்சி பெற்றுள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு முன் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதன் காரணமாக செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் தற்போதும் தொடர்கின்றன என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஏற்கெனவே நடைபெற்ற முறைகேடுகளுக்காக தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரலாமே ஒழிய, அதன் காரணமாக கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே, சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரி நியமனம் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தனது வாதத்தில் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.