வறட்சி: எம்பி, எம்எல்ஏவுக்கு 20 சதவீத சம்பளம் கட்-காங். முடிவு
டெல்லி: நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விலைவாசி உயர்வை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் கைவைக்க முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களை முடிந்தவரை சிக்கனமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்டியின் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விலைவாசி உயர்வு, வறட்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கூட்டம் நிறைவு பெறும் நேரத்தை தாண்டி மேலும் 3 மணி நேரத்துக்கு விரிவு செய்யப்பட்டது.
துறவறம் மேற்கொள்ளுங்கள்...
அப்போது சோனியா காந்தி பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியினர் பொது இடத்திலும், தங்களது வீட்டிலும் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தில் 20 சதவீதத்தை வறட்சி மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை தடுக்க தேவைப்படும் பணிகளுக்கு கொடுக்க வேண்டும்.
அவர்கள் முடிந்தவரை சிக்கனமாக வாழ வேண்டும். துறவிகளை போலிருப்பது நல்லது.
மொத்த விலை குறியீடு வீழ்ச்சி அடைந்துள்ளது, அதே சமயத்தில் பணவீக்கமும் குறைந்துள்ளது. ஆனால், பொருட்களின் விலைவாசி மட்டும் குறையவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன் என்றார்.
பதுக்கல்காரர்கள் தான் காரணம்...
கூட்டத்தின் மேற்கொள்ளபட்ட தீர்மானங்களை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன திரிவேதி கூறுகையில்,
வறட்சியை சமாளிக்க மத்திய அரசுக்கு கைகொடுப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சியிடம் இருந்து சம்பளம் பெறும் நிர்வாகிகள் ஆகியோரின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அடுத்து ஓராண்டுக்கு இந்த சம்பள பிடித்தம் இருக்கும்.
மேலும் சிக்கன நடவடிக்கையாக நாடாளுமன்ற நிலை குழுக்களின் சுற்று பயணங்கள் ரத்து செய்யப்படுகிறது. தலைநகரில் நடத்தப்படும் இந்த குழுவின் கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் துறவிகளை போல் வாழ வேண்டும். தேவையற்ற செலவுகளை நிறுத்த வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு பதுக்கல்காரர்கள் தான் காரணம். இது மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசால் இங்கே எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications