தமிழர்கள் முகாம்களில் சுகாதார கேடு-இலங்கைக்கு யுஎஸ் எச்சரிக்கை
கொழும்பு: முகாம்களில் சுகாதார கேடுகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் போர் நடந்து முடிந்தநிலையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றன.
அவர்கள் ஆடு, மாடுகளை போல் முள்வேலிக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதியில் கடுமையான சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கி கிடப்பதால் ஏற்பட்ட தொற்று நோய்க்கு 5 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆனால், இதை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. இதையடுத்து அமெரிக்க அரசின் அகதிகளுக்கான வெளியுறவு துறையின் இணை அமைச்சர் எரிக் ஸ்வார்ட்ஸ் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு இடத்தில் தங்கவிரும்பாத மக்களை அந்த இடத்தில் தங்க வைப்பது தவறானது. அதுவும் மழை காலத்தில் போதிய சுகாதாரம் இல்லாத இடங்களில் தங்க வைப்பது வருத்தம் அளிக்கிறது.
முகாம் பகுதியில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். இது மிகவும் அவசியமானது என இலங்கையின் நண்பர்களாக தெரிவித்து கொள்கிறோம். கடந்த மாதம் நான் முகாம்களுக்கு சென்றிருந்த அங்கு போதிய வசதிகள் இன்றி மக்கள் துன்பப்படுவதை பார்த்தேன்.
முகாம்கள் போன்ற நிரந்தரமற்ற குடியிருப்புகளில் மக்களால் மழை காலத்தில் வசிக்க முடியாது. அவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். அந்த முகாம்களில் உள்ள குழந்தைகள் சத்தான உணவில்லாமல் பரிதாபமாக காட்சியளிக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications