திருமாவளவன் மீது இளங்கோவன் கடும் தாக்கு
சென்னை: தீவிரவாத இயக்கத்தை ஆதரி்ப்பதோடு காங்கிரசையும் காங்கிரஸ் தலைவியையும் விமர்சிப்பவர்கள் சந்திக்கும் விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை மத்திய இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். இதில் இளங்கோவன் பேசுகையில் விடுதலைச் சிறுத்தைகளை பெயர் குறிப்பிடாமல் கடுமையாகத் தாக்கினார்.
அவர் கூறுகையில்,
சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தயவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறி வருகிறார்கள். நமது தயவில் ஜெயித்து டெல்லியில் சல்யூட் அடித்து சலுகைகள் பெற்று வருபவர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள்.
அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்கள். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்கவில்லை.
அது மட்டுமல்ல முறையாக டிக்கெட் எடுத்து பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி விட்டு வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பட்ட அவதிகளை எல்லாம் தமிழ்நாடு அறியும்.
இப்படி நடந்து கொண்டது மட்டும் அல்ல, தீவிரவாத இயக்கத்தையும் ஆதரித்து வருகிறார்கள். காங்கிரசையும் காங்கிரஸ் தலைவியையும் அவர்கள் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இதேநிலை நீடித்தால் அவர்கள் சந்திக்கும் விளைவு மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றார்.