49ஓ-வை பெரும்பாலான வாக்காளர்கள் பயன்படுத்தவில்லை
சென்னை: இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அழைப்பை மட்டுமல்லாமல், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் 49ஓ பிரிவையும் பெரும்பாலான வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர்.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், அதை சொல்ல 49ஓ என்ற விதி உள்ளது. இதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்ததால், அதிமுகவினர் பெருமளவில் இதைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐந்து தொகுதிகளிலும் வெகு சொற்பமானவர்களே இதைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் 49ஓவையும் வாக்காளர்கள் புறக்கணித்து விட்டது தெரிய வந்துள்ளது.
கம்பம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1,45,673. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 1,12,153. 49-0 வசதியை 57 பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
இளையாங்குடியில், வெறும் 15 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 65 பேரும், தொண்டாமுத்தூரில் 97 பேரும் இந்த வசதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
பர்கூரில் ஓ போட்டவர்கள் லிஸ்ட் கவருக்குள் வைத்து சீலிடப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையின்போதுதான் எத்தனை பேர் ஓ போட்டனர் என்று தெரிய வரும்.
கடந்த லோக்சபா தேர்தலில் கணிசமானவர்கள் ஓ விதியைப் பயன்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த இடைத் தேர்தலில் வெகு சொற்பமானவர்களே அதை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.