சேலத்தில் ஏற்பட்ட திடீர் சத்தத்தால் மக்கள் பீதி
சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நில அதிர்ச்சி ஏற்பட்டது போல பலத்த சப்தம் கேட்டதால் மக்கள் பூகம்பம் வந்து விட்டதோ என்று பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
சங்ககிரி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் மூன்றே கால் மணியளவில், திடீரென பலத்த சப்தம் கேட்டது. மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்டது போன்ற உணர்வையும் மக்கள் சந்தித்தனர். இந்த சத்தம் மற்றும் அதிர்வு சித்தர்கோவில் வரை உணரப்பட்டது.
சங்ககிரி பூவானூர், கன்னந்தேரி பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதையடுத்து வீடுகள் மற்றும் கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்கள் சில வினாடிகள் அதிர்ந்தன. ஆஸ்பெஸ்டாஸ் மூலம் அமைக்கப்பட்டிருந்த சில வீடுகளின் கூரைகளும் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து, வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர். வானில் விமானம் சென்றதால் ஏற்பட்ட சத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதினர்.
பூலாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் பயங்கர சத்தம் கேட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். மேச்சேரியிலும் பிற்பகல் வெடி வெடித்ததுபோல பயங்கர சத்தம் கேட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை இதுபோன்ற சத்தம் ஏற்பட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.
சத்தம் கேட்டபோது வானத்தில் நீண்ட தூரத்திற்கு புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியிலும் பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, நிலநடுக்கம், நிலஅதிர்வு போன்றவை பதிவாக கூடிய சீஸ்மோகிராபி என்ற கருவி இங்கு உள்ளது. எங்கு நிலநடுக்கம், நிலஅதிர்வு ஏற்பட்டாலும் இந்த கருவியில் பதிவாகிவிடும். ஆனால் இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் இங்குள்ள கருவியில் எந்த ஒரு நிலஅதிர்வும் பதிவானதற்குரிய அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்தனர்.
இதேபோல மேட்டூரில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளும் நில அதிர்வு கருவியில் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்தனர்.
எதனால் இந்த சத்தம் ஏற்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது.