கற்பழித்த கயவர்களை துரத்திச் சென்ற பெண்
பாட்னா: தன்னை கற்பழித்த மூன்று பேரை இளம் பெண் ஒருவர் நெரிசல் மிக்க மார்க்கெட் மற்றும் தெரு வழியாக துரத்திச் சென்றதால் பாட்னாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்னாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ராஷ்மி. 21 வயதாகும் இவர் புதன்கிழமை பாட்னாவில் உள்ள பாலிகஞ்ச் என்ற இடத்தில் பஸ்சில் வந்து இறங்கினார். பாட்னாவிலிருந்து சொந்த ஊரான ராம்நகருக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.
ராம்நகர் செல்ல வேண்டிய பஸ்சுக்காக அவர் காத்திருந்தபோது தனது மொபைல் போன் மூலம் வீட்டினரைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் போன் வேலை செய்யவில்லை.
அப்போது அவருக்கு அருகில் நின்றிருந்த 3 இளைஞர்கள், செல்போனை சரி செய்து தருவதாக கூறி வாங்கியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்த அவர்கள் அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்திற்குக் கூட்டிச் சென்றனர்.
பின்னர் மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அந்த மூன்று பேரிடமும் சிக்கி அப்பெண் தவித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து மூவரும் தப்பிச் சென்றனர். கிழிந்து போய் விட்ட தனது உடைகளை கழற்றி விட்டு சூட்கேஸில் வைத்திருந்த இன்னொரு உடையை வேகமாக அணிந்த ராஷ்மி, அரை குறையாக உடை அணிந்த நிலையில் மூன்று பேரும் ஓடிய பகுதியில் துரத்திக் கொண்டு சென்றார்.
பாலிகஞ்ச் மார்க்கெட் வழியாக 3 கயவர்களும் தப்பிப் போவதைப் பார்த்த அவர், அவர்களை துரத்திச் சென்றார். கலைந்த உடையுடன் தலை விரி கோலமாக ஒரு பெண் 3 ஆண்களை துரத்தி வருவதைப் பார்த்து மார்க்கெட்டே அதிர்ச்சி அடைந்தது.
ஆனால் ஒருவரும், கற்பழிப்புக் கயவர்களை பிடிக்க முயலவில்லை. விடாமல் துரத்திச் சென்றும் அந்த நபர்கள் தப்பி ஓடி விட்டதால் அதற்கு மேல் ஓட முடியாமல் அந்தப் பெண் நின்று விட்டார். பின்னர் தனது உடையை சரி செய்து கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார் ராஷ்மியைக் கற்பழித்த மூவரில் ஒருவனான ஷியோ ஷாம்பு என்பவனைக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.