ஸ்வைன் ப்ளூ பலி உயர்கிறது-இதுவரை 48 பேர் சாவு
டெல்லி: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இத்தகவலை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடநத 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் நால்வர், டெல்லியில், குஜராத்தில் தலா இருவர், சென்னை, புனேவில் ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிக அளவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் கர்நாடகத்தில்தான் உள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர். இதில் புனேவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் ஐந்து பேரும், தமிழகம், டெல்லியில் தலா இருவரும், கேரளத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். மொத்தம் 45 பேர் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் 159 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2401 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு...
இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு பாம்பே உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்திற்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
புனே பயணிகளுக்கு முகக்கவசம் விநியோகம்...
இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மும்பையிலிருந்து புனே செல்லும் டெக்கான் க்வீன் ரயில் பயணிகளுக்கு இலவசமாக முகக் கவசங்களை விநியோகித்து வருகிறது.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இந்த சேவையை அது மேற்கொண்டது.